Thursday, August 20, 2009

வாழ்க்கை வாழ்வதற்கே தான்

வலிகள் சுமப்பதற்கே தான்
இதயம் எதையும் தாங்கவே தான்
இடிபுயல் போல பிரச்சினை வந்து
இருப்புக்கள் எல்லாம் இழந்ததன் பின்பும்
உறவுகள் என்ற சுயநலம் கொண்ட
மனிதர்கள் எல்லாம் உன்னை
ஒதுக்கிய பின்பும்
பணம் பொருள் பதவி எல்லாம்
பறிபோன பின்பும்
நம்பிக்கையோடு நீ காத்திரு
நாளை உனக்கான விடியல்
வரும் அதுவரை பொறுத்திரு
ஏனெனில் வாழ்க்கை வாழ்வதற்கே தான்.

என் பயணம்

இழப்புக்களின் வலிகளையும்
பிரிவுகளின் துயரத்தையும்
உணர்ந்திருக்கின்றேன் நான்
சுமப்பதற்காக பிறந்ததனால்
சுகமாகிப் போயின சுமைகளும்
இனியென்ன உள்ளதென்று
இருவிழி நனையவில்லை
மனமெல்லாம் முரடாகி
மானிடரை வெறுக்கவில்லை
கண்ணீர்த்துளிகளின் உப்புச்
சுவைகூட கரிப்பதில்லை எனக்கு
வலிகளையே வாழ்க்கையாக்கி
நீண்டு செல்கின்றது என் பயணம்
விழிவழி வழியும் நீரை
நிமிண்டி விடுகின்றது என் விரல்கள்
யாருக்கும் தெரியாமல்
வடுக்கள் ஏதும் குறையாத போதிலும்
பாதைகள் யாவும் கரடாக இருக்கையிலும்
பயணிக்கவேண்டிய கட்டாயத்தில் நான்........

புரியாத புதிர்

இரு தசாப்பதங்களுக்கு மேலாக
படிக்க முனைந்து
விளங்கிக் கொள்ளமுடியாமல்
நான் தோற்றுப் போன
ஒரு கடினமான அத்தியாயம்
இருப்புக்கள் தொலைந்து
இழிநிலை வரினும்அ
வள் மௌனம் கலைவது இல்லை.
கொடுந்துயர் வந்து
குடும்பமே கலங்கினாலும்
அவள் நிதானம் இழந்தது இல்லை
இப்போதும் கூட எனக்கு
அவள் ஒரு புரியாத புதிர் தான

விந்தை மனம்

முடிவிலியா இந்த மனத்திற்கு
தாங்கு சக்தியும் அதன் நீட்சி எல்லையும்
உயிரையே பிழிந்தெடுக்கின்ற
வலி மிகுந்தாலும் வலுவிழக்காது
வாழ்வதற்காகப் போராடத் துடிக்கும்
விந்தை மனது இது!

Wednesday, August 05, 2009

ஏன் மறுக்கிறான்?

வேட்டையாடி,
விலங்கு வளர்த்து,
வேளாண்மை செய்தார் - அப்போது
அவர்களுக்கு ஊரும் இல்லை - அங்கு
கோயிலும் இல்லை

இனங்கள் பெருகின
போட்டிகள் தோன்றின
தன்னை விஞ்சிய
அனைத்தையும் வணங்கினர்
விதிமுறை வகுத்தனர்
எல்லைகள் குறித்தனர்

தேவைக்கேற்பவே
கண்டுபிடிப்புத் தொடர்ந்தது
சாதிகள் வளர்ந்தது
சமயங்கள் பெருகின

சமூக ஒழுங்கிற்காய்
சாத்திர விதிகள்
சாத்வீக வாழ்வுக்காய்
சத்திய போதனைகள்

மறந்தான் மனிதன்
மானுடத்தை
மனிதத்தை
ஆன்மாவின் நேயத்தை

இழந்தான் வாழ்வின்
இன்பத்தை
அமைதியை - தன்
இருப்பைக்கூட

வலியன் கூறுவதே
வேதம் ஆனது
எழியவர் என்றுமே
அடிமைகள் ஆயினர்

கடவுளைப் படைத்தான் - ஆனால்
கருணையை மறந்தான்
தானங்கள் கொடுத்தான் - ஆனால்
ஏழையை மறந்தான்

சாத்திரம் சடங்கை
மாற்றினான் தன் வசதிக்காக
மாற்ற மறுக்கிறான் - சில
மூட நம்பிக்கைகளை மட்டும்

Tuesday, August 04, 2009

சிலவேளை...

சிலவேளை நான் சுவாசிக்கலாம் - நாளை
உன் பிரசன்னத்தின் சுகந்தத்தை
சிலவேளை நான் உனது கைகளுடன் - நாளை
எனது கைகளையும் கோர்த்து நடக்கலாம்
சிலவேளை நான் மகிழ்ச்சியில் - நாளை
சிரிக்கலாம், ஏன் அழவும்கூடும் - ஆனந்தத்தில்

சிலவேளை தனிமையின் துணையுடன்
மௌனத்தில் கரையும் என் பொழுதுகள் - சோகத்தில்

பலவேளைகளில்..
சிலவேளை...........இருந்திருந்தால் என்றெண்ணி
நானே மௌனமாகிவிடுகிறேன்

Sunday, August 02, 2009

நகரம்

புழுதிபடிந்த தெருக்கள்
புகை கசியும் ஊர்திகள்
புன்னகை மறந்த மனிதர்கள்
பூக்களில்லாத ஆலயங்கள்
இயக்கமின்றியே இயங்குகிறது நகரம்
பழைய கடதாசிகள் குப்பைகளாக
வேலியை அலங்கரிக்கின்றன
உருக்குலைந்த பனையோலைகள்
வீதியோரத்தில் நானும் எவர்க்கும் பயனின்றி

உன் பாசம்

பாசம் என்பது யாருக்கு இல்லை
பளிச்சென வெளிப்படுத்துவதில்தான் பலருக்கு சிக்கல்
பதுக்கிவைத்தால் எவருக்கும் தெரியாது
உன் பாசம் என்பதை மற்றவர் உணர்ந்தாலே - அது
மலையருவியாக உன்மீது சொரியும்
பலாப்பழம்போல பாசமும் என்றால் - எவர்
காத்திருப்பார் அது கனியும்வரை
இன்று உன்னுடன் அருகில் இல்லை
நேற்றுவரை உன்னுடன் ஒன்றாக உண்டு உறங்கியவர்கள்
நாளையும் எப்படியோ யாரறிவார் நம் விதியை
வட்டிபோட்டு சேர்த்திடாமல் வாரியிறைத்துவிடு
வாழும்காலம் முடிந்தபின்னும் வாழும் உன் பாசம் என்றும்

Thursday, July 30, 2009

நீயும் நானும்

நீயும் நானுமாய் தீட்டிய அழகான ஓவியம்
எங்கே இருப்பது என்று தெரியாமல் தள்ளாட
நாங்கள் நாளை சாதனை படைப்பதற்காக
தனித்தனியாக
வரைகின்ற அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றோம்

என் கவிதை

எழுதப்படாத என் கவிதையை
வாசிக்க நீ துடித்ததில்
இழந்து போனது உன் நிம்மதி
விட்டு போனது என் சந்தோஷம்

திருமணம்

கனவுகள் இருந்தது எனக்கும்
உன் போட்டோவை அப்பா என்னிடம் நீட்டும்வரை
புதைத்துவிட்டேன் அவற்றை எவருமறியாமல்
என் ஆழ் மனத்தினுள்
அப்பாவின் சுமையைக் குறைப்பதற்காக
அந்த நாள் முதல் - நான்
உன் மனைவியானேன்
உன் தோழியானேன்
உன் காதலியானேன்
உன் தாதியானேன்
நீயே எனக்கு எல்லாமென - ஆனால்
நீயோ உன் அடிமையென்றாய்
ஒற்றை வார்த்தையால் கொன்றுவிட்டாய்
நடைப்பிணமாகத் திரிந்த என்னை

Tuesday, July 28, 2009

இடம்கொடு

காலை மாலை காத்திருந்தேன்
ஒரு கடைக்கண் பார்வைக்காக
பூக்களும் மாலையில் தலைகவிழ்ந்தன – உன்
புன்னகை காணாது
ஏட்டுச்சுரைக்காயே என்னளவில்
காதல் என்பது - உன்னைக்காணும்வரை
வானம் பூமியைத் தழுவிக்கொள்ள
வண்ண நிலவாய் நீ தெரிந்தாய்
நினைவே கனவாக கனவதுவே நினைவாக
வாழ்கிறேன் நானும் ஏகாந்தத்தில்
இதயத்தை நீ தரவேண்டாம் - என் அன்பே
எனக்கும் அதில் ஒரு இடம்கொடு

Sunday, July 26, 2009

உலகம்!

விழிகளை மூடுகிறேன்
தட்டிக்கேட்க முடியாமல்
தீயதைக் காணநேர்ந்தால்
காந்தியின் மேசைக் குரங்குபோல- ஆனால்
உள்ளத்தை..
அதன் உள்ளுணர்வை..
திரைபோட முடியுமா?
தொண்டைக்குழிவரை
எழுகின்ற வினாக்களைத்
திருப்பி அனுப்புகிறேன் எச்சிலுடன்
வலுக்கட்டாயமாக - பயத்தில்
வினாக்களை விழுங்கியவர் பலர்
விடைகளை வைத்திருப்பவர் பலர்
இதுதான் உலகம்!

Saturday, July 25, 2009

அப்பார்ட்மென்டும் அவஸ்தைகளும்

ஆறு மாதம் கூட ஆகாத என்பையன்
அர்த்த இராத்திரியில் தூக்கம் தொலைத்து
வீரிட்டு அழுதான் ஆறுதல் படுத்த முடியாத
அவஸ்தையில் நான்தன்தூக்கம் பறிபோனதாக படியேறி
வந்து கத்தினாள் என்கீழ் வீட்டு எஜமானி
அவளின் அலறலில்
அழுகை மறந்தது என் குழந்தை
ஆனந்தமாக சாரி கேட்டேன் அவளிடம் நான்!

அது மட்டும் எதுக்கு?

தனிமையின் சுமையை
பிரிவின் துயரத்தை
வலியின் ஆழத்தை
இழப்புக்களின் கொடுமையை
என தவறவிடாமல்
எல்லாவற்றையும் கொடுத்த நீ
இவற்றினை தாங்கும் என்
இதயத்தை மட்டும்
எடுத்துச் சென்றது ஏன்??

Friday, July 24, 2009

என் காதல்

எனக்குள்ளே...
அருவாகி
உருவாகி
உயிராகிய என் காதல்
உனக்குள் நான் என
உணர்வாலே ஒன்றாகிய
என் உயிர்க் காதல்
சலிப்பே இல்லாமல்
தரையைத் தழுவும் கடல்போல
சத்தமின்றியே இனிய சங்கீதமாய்
என்னுள் என்றும் ஒலிக்கிறது!

நானும் நீயும்!

புன்னகையை மறந்துவிட்ட நான்
உன் நினைவுகளில் புன்னகைக்கிறேன்!
கண்ணீர் சிந்திப் பசுமையிழந்த என் உள்ளம்
உனக்காகவே இன்னும் பாலைவனமாகவில்லை!
உன்னை நினைக்கும்போது மட்டும்..
உள்ளத்தில் மகிழ்ச்சி, உதட்டிலோர் புன்னகைக்கோடு
ஏமாற்றங்களை ஏற்கமுடியாமல்..
எதையுமே எதிர்பார்க்காத என் உள்ளம்
எதிர்பார்த்திருக்கிறது உன் வரவைமட்டும்!

Tuesday, July 21, 2009

அந்த வரிகள்.........

நீ அதிகம் படிக்கவில்லை என்றாலும் கிறுக்கலான எழுத்தில்

நீ எழுதிய ஆழமான அந்த வரிகள் - என்மீது

நீ வைத்திருந்த அன்பை உணர்த்தியதே.........

என்ன கோலம்????

கணவன் இறந்தால்..........

பூவைப்பறித்து...

பொட்டை அழித்து...

தாலியைக் கழற்ற...

வெள்ளை உடுத்தி...

விதவைக்கோலம்!

மனைவி இறந்தால்..........

மகனே உனக்கு என்ன கோலம்??????????????

இன்னும் இருக்கிறது.........

இதயத்தைப் பிழியும் வலிகள்,
இயங்கமறுக்கின்ற உடல்கள்,
சிந்திக்க மறுக்கும் மூழை,
செந்நெறி தவறிய உலகம்,
சுயநலத்தில் ஊறிய மனிதர்கள்,
இவை எல்லாம் என் கண்முன் விரிந்தாலும்....
இன்னும் எரிகிறது அந்த இலட்சிய நெருப்பு!
காலநதியின் ஓட்டத்தில்,
திசைமாறியது என் பயணமெனினும்
கனவாகிப் போகாது அந்த இலட்சிய வேட்கை!