Tuesday, February 16, 2010

விடுபட முடியாமல் ....


இருள் அகலாத காலை பொழுதினில்
எனக்குள் இருந்த உறக்கம் தொலைந்தது
இறுக்க மூடிய போர்வை விலக்கி
கண்களை கசக்கி கடிகாரம் தேடினேன்
பிள்ளையார் கோவிலின் பெரியமணி
மூன்று தடவைகள் அடித்து ஓய்ந்தது
எங்கோ தொலைவில் ஒற்றைக் குயில்
கூவி இசைப்பது காதில் ஒலித்தது
வேப்பமரத்து காக்கா விடியவே
வந்து தன் வரவு பகிர்ந்தது
மெல்ல ரெலிபோன் சிணுங்கும் சத்தம்
மிச்சம் இருந்த சோம்பலை பறித்தது
எட்டி மெல்ல எடுத்த போது
என்னவள் குரல் இதமாய் இருந்தது
"செல்லம்" என்ற சிணுங்கல் சத்தம்
சிட்டாய் எந்தன் நெஞ்சை நிறைத்தது
எதிர் இருக்கைகாரன் எழுந்து செல்ல
மெல்ல சொன்னான் பாதோம் (மன்னிக்கவும்)என்று
கண்கள் திறந்து வெளியே
பார்க்கையில் கடந்திருந்தேன்
இறங்கும் இடத்தை ....

Saturday, February 13, 2010

வலி


அதிகாலை தொலைந்தும் தூக்கம் மீராவை நெருங்காது துன்புறுத்திக் கொண்டிருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. எப்போதுமே அடிமனதில் இருக்கும் வலிதான் அது. இன்று அதிலிருந்து அவளால் மீள முடியவில்லை.
அவர்கள் வீட்டில் தான் லட்சுமி மாமி இடம்பெயர்ந்து வந்து இரண்டு வருடங்களாக இருக்கிறாள். அவள் தனது மூன்று வயது நிலாவைக் கண்டித்துக் கூறிக்கொண்டிருந்தாள். நிலா எதுவும் பிழை செய்துவிடவில்லை. எல்லா சிறுமிகள் போல அவளும் இன்று மதியம் வீட்டுக்கு வந்த தனது ஒன்றுவிட்ட குட்டித்தங்கையை தூக்க ஆசைப்பட்டாள். அதற்கு தான் மாமி மீராவைக் இழுத்து விவாதித்துக் கொண்டிருந்தாள். நிலா குழந்தைகளை நீ ஒரு போதும் தூக்க கூடாது. வானதியக்காவை அவ குட்டி பாப்பாவாக இருக்கும் போது மீராக்கா தூக்கி விழுத்தியதில் தான் அவ கதைக்க முடியாமல் கையால் கதைக்கிறா. நீ ஒரு குட்டி பாப்பாவையும் தூக்கக் கூடாது. ஓகேயா!

நிலாவிற்கு அவள் சொன்னது புரிந்ததோ இல்லையோ தலையை ஆட்டியபடி கேட்டுக்கொண்டிருந்தாள்.
ஆனால் வீட்டிற்கு பின் நின்று பூப்பறித்துக் கொண்டிருந்த மீராவின் தலையில் யாரோ பலமாக சம்மட்டியால் அடித்த உணர்வு. தாங்கமுடியவில்லை. அப்படியே யாரும் அறியாமல் தன் அறைக்குள் நுழைந்தவளுக்கு அழுகையை அடக்கமுடியவில்லை.
ஐந்து வயதில் ஆசைப்பட்டு ஆறுமாதமான வானதியை அவள் தூக்கியது வீழ்த்தியது எதுவுமே அவளுக்கு நினைவில் இல்லை. மூன்று வயதாகியும் வானதி கதைக்காத போதுதான் முதன்முதலில் டொக்டரிடம் காட்டினார்கள். அவர் இது பரம்பரையால் வந்ததாகவோ அல்லது உயரத்தில் இருந்து விழுந்ததாலோ ஏற்பட்டதாக இருக்கலாம். எனினும் வானதி கதைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறினார். தெரியாத வயதில் அறியாமல் அவள் செய்ததை அவரவர் தங்கள் குழந்தைகளுக்கு கதையாக சொல்கையிலும் விபரம் தெரிந்ததில் இருந்து வானதியை அவள் பார்க்கையிலும் அவள் ஆழ்மனதில் பீறிட்டு எழும் வலியின் ஆழத்தையும் யாரும் அறிவதில்லை.
ஒருவரின் வாழ்க்கை இன்னொருவரிற்கு சுவாரஸ்யமான சம்பவம் ஆகிவிடுகின்றது போல. அவரவர் வலி அவரவர்க்கே. சிந்தனை ஓட்டத்தில் சுய பச்சாதாபம் மேலோங்க மீரா அந்த ஆழமான வலியுடனே அயர்ந்துபோனாள்.

Sunday, February 07, 2010

அச்சச்சோ !!




தை 30 . தைப்பூசம். அம்மா, அத்தை இருவரும் அது நல்ல நாள் என்று உறுதியாக சொன்னதில் என் பையனிற்கு சோறு தீர்த்தலாம் என முடிவானது.
காலையில் இருந்தே ஒரே பரபரப்பு. எல்லா வேலைகளும் முடித்து நாங்களும் கோவில் வந்து சேர அண்ணாவும் வந்துவிட்டார். ஆசைக்கு ஐந்தாறு போட்டோ எடுத்து அந்த காரியம் சிறப்பாகவே முடிந்ததில் பரம திருப்தி.

பிள்ளைகள் கூட வருவது கஷ்டம் என்று அடிக்கடி கோவிலுக்கு வருவதுமில்லை. வந்தனான் அர்ச்சனையும் செய்து கொண்டு போவோம் என நினைத்து மகனை இவரிடம் வைத்திருக்க கொடுத்துவிட்டு லைனில் நின்றேன். எனக்கு முன்னால் 3 பேர் தான். பின்னால எப்டியும் பத்து பேருக்கு குறையாது. கடவுளே பிள்ளைக்கு பசிவர முன்னம் போகணும்.

என் முன்னால் நின்றவர்களது அர்ச்சனையினை முடித்து ஐயர் என்னிடம் வந்தார். அவருக்கும் ஒரு 30 க்கும் 40 க்கும் இடையில் தான் வயசு. நல்ல களையான முகம்.

எங்கட குடும்பத்துக்கும் அக்கா குடும்பத்துக்கும் செய்யவேணும்.
ஐயர் என்னிடம் வந்து பெயர் நட்சத்திரம் சொல்லுங்கோ என்றார்.

நானும் சுகிர் குடும்பம் நாமதேசிய !!!!
வசந்தன் குடும்பம் நாமதேசிய !!!!!!!!
என்றேன்.

என் பக்கத்தில் நின்றவர்கள் வாய்பொத்தி சிரிக்க ஐயர் சிரிக்க வழியின்றி தவிக்க, என் தவறு எனக்கு புரிந்தது. பம்பலாக கதைப்பது பழக்கதோசத்தில் வந்துவிட்ட சங்கடத்தில் தலையை சொறிந்தபடி நான் நெளிந்தேன்.