Monday, April 12, 2010

தடை ..


இரவுக்கும் பகலுக்கும்
யுத்தம் நடக்கும்
காலைப் பொழுது
குளிர்மை நீங்கா
அதிகாலை காற்று
தூக்கம் கலையாத
முகங்களுடன்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
காலை மனிதர்கள்

பறந்து வந்தன
ஜோடிக் குருவிகள்
பார்வைகளில்
காதல் மின்ன
படபடவென்று
பேசிக் கொண்டன
அலகால தலைகோத
கட்டிக்கொண்டது
மற்றக்குருவி

வெட்கப்பட்டு திரும்புகையில்
பறந்து வந்தது
இன்னோர் குருவி
உலகம் மறந்து
ஒன்றித்து நின்றவை
ஒருவித திகிலுடன்
விலகிப் போயின
வில்லன் குருவி
பக்கத்தில் வர
விரைந்து பறந்தது
ஜோடியில் ஒன்று

ஏக்கத்தோடு மற்ற குருவி
என்னை பார்க்கையில்
எனக்கும் மெல்ல அழுகை வந்தது
காதலில் தடை
காக்கைக்கும் வருமோ?

Saturday, April 10, 2010


பெண் என்றால் ......

என் முன்னாலேயே
இன்னொரு பெண்ணை
சப்பை பிகருடா என்று
சலிச்சு கொண்டவன்
என் போட்டோ ஒன்றுக்கு
fb யில் பால்ய நண்பன்
ஏதோ எழுதி இருந்ததை
பார்த்து எரிந்து விழுகிறான்
நான் தனக்கு மட்டுமே தானாம்..


நெற்றிக்கு குங்குமம்
காலுக்கு மெட்டி
கழுத்துக்கு தாலி
என்று சம்பிரதாயங்களில்
வேலி போட்டு
பாதுகாத்து கொள்கிறார்கள்
மனைவியை
மனசு இருப்பதை
அறியாத மனிதர்கள்

Sunday, March 07, 2010

தப்புகணக்கு


ஏங்க அவங்களுக்கு அறிவில்லையா? அப்படியெண்டா முதலே call பண்ணியிருக்கலாம் தானே? இப்போதான் வேலையால வாறியள். இனி திரும்ப போறதெண்டா சும்மாவா?


"என்னடா செய்ய. நிறைய things போல. அதுதான் கேட்கினம். " என்னை சமாதான படுத்தும் தோரணையில் என்னவர்.
அப்போ டாக்ஸி பிடிக்கிறதுதானே? புறுபுறுத்தபடியே பையனை தூக்கிக்கொண்டு றூமுக்குள் போய்விட்டேன் நான்.
" உனக்கு தெரியும் தானே. அவயளிண்ட பாடும் இப்ப கொஞ்சம் இறுக்கம்" என்று சொல்லியபடியே இறங்கிப் போய்விட்டார் இவர்.

பெரிசா எதுவுமில்லை. ஜேர்மனி போயிருந்த ஜெயாக்கா திரும்பி வாறா. அதுதான் உதவிக்கு இவரை ஸ்டேஷன் இற்கு வரச் சொல்லி கூப்பிட்டவ. இவரிட்டை என்ன கார் இருக்குதே? அவரு திரும்பி வந்த போது கூட என் கோவம் குறையவில்லை.

மதியம் வீடை நிற்பியளோ எண்டு கேட்டு ஜெயாக்கா call எடுத்தா.

"ஓமக்கா. வாங்க நேரில கதைப்பம்" எண்டு வச்சுட்டன்.

இவர் வந்த பிறகு தான் அவையளும் வந்திச்சினம். கை நிறைய bag .
பையனுக்கு வோல்க்கர், பொண்ணுக்கு அவளின்ர வயசு சைக்கிள், இவருக்கு ஒரு ஜக்கட், சண்ட்விச் செய்யுற ஒரு மெசின்.,எனக்கு மொடலான ஒரு சப்பாத்து என்று

வாங்கணும் என்று பேச்சுவாக்கில் நான் சொன்னது அடங்கலாக நிறையவே அக்கறையோட வாங்கி வந்திருந்தா ஜெயாக்கா.


அவ ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் வைக்க என்னவர் நிமிர்ந்து என்னை பார்த்தார்.

அந்த விழிகளை ஏறிடும் துணிவின்றி கிச்சினிற்குள் புகுந்தேன் தேனீர் தயாரிக்கும் சாட்டில்.

Saturday, March 06, 2010

காதலுடன்



மூளை சொல்லியும் கேட்காமல்
என் மனது உன் பின்னால் வருகிறது
இருபார்வை சங்கமித்து
இதயங்கள் ஒன்றாகி வருவது ..
அதுதானே காதல்
தெரிந்தும் எதற்கு
இத்தனை முரண்டு எனக்குள்

கருக தொடங்கும் எந்தன் காதல்
துளிர்த்துவிடுகின்றது உந்தன்
ஒற்றை பார்வையில்
அடுக்கடுக்காய் விளக்கம் சொல்லி
விலகிப் போய்விட
உன் செயல்களுக்கு அர்த்தம்
நான் தேடுகையில்
ஒருவார்த்தை சொல்லி என்னை
உசுப்பி நீ போகிறாய்

மீளவும் முடியாமல்
மீட்கவும் முடியாமல்
நானிங்கு போராட
வாழவும் இயலாமல்
சாகவும் துணியாமல்
என் மனதிங்கு தள்ளாட
என்ன செய்வேனடா நான்
உந்தன் மீதான
ஒருதலைக் காதலுடன்

Wednesday, March 03, 2010

நாங்கள் இல்லாமல்


நானும் நீங்களுமாய்
வாழ்ந்த தெருக்களில்
உங்கள் பாதச்சுவடுகளை
தேடி போனேன்
கணக்கின்றி வளர்ந்திருந்தது
தகரைகள் எங்கள் வீதியில்
எட்டி பிடுங்கிய புளியமரம்
எறிந்து பிடுங்கும் அளவு
உயர்ந்து இருக்க
தோடு போட்ட கொன்றை மரம்
பூத்து குலுங்க
வாசல் வேப்பமரத்து
அந்த ஜோடி காக்கைகள்
நேரம் தவறாமல் வந்து அழைப்புவிட
பனங்காய் சாப்பிட அந்த சிவப்பி மாடு
இப்பவும் வேலியால் வர என்று
எதுவும் மாறாமல் இருந்தது
நாங்கள் இல்லாத எங்கள் வீட்டிலே

Tuesday, March 02, 2010

கனவுகளில் காண்கின்றேன் ...


ராசாத்தி நீ என்னை ஒரு நாலரை போல எழுப்பிவிடு. வாழையளுக்கும் மரவள்ளிக்கும் ஒருக்கா இறைப்பம். வரம்பு கட்டினது நாரி எல்லாம் விண் விண் எண்டு வலிக்குது.

'சரி சரி நீங்க படுங்கோ. எழுப்புறன்.' அவள் கூடை பின்னுவதிலேயே கவனமாய் இருந்தாள். என்ன அலுப்பு .........

ராசாத்தி அடிக்கடி என்னால சைக்கிள் ஓடமுடியாது. தேவையான எல்லாத்தையும் இப்பவே மருமோன்மாரிட்ட சொல்லிவிட்டுடு.
எங்கயோ தூரத்தில் இருந்தபடி அவள் என் குரலுக்கு 'ஓம் ஓம்' எண்டு கேட்டது.
என்ர காலையே சுத்தி சுத்தி நிண்டவள். இப்ப கண்ணிலேயே படுறாள் இல்ல. இருக்காதே பின்ன. எனக்கே எவ்வளவு சந்தோசமாய் இருக்கு. நாலு பொண்ணுகளும் வந்து நிற்குதுகள். மனசு மாதிரி வீடும் நிறைஞ்சு போச்சு.
நாளைக்கு பெரியவளின்ர பையனுக்கு கொழுக்கட்டை கொட்டுவம் எண்டு தான் அடுக்கெடுப்பு நடக்குது. இதில அடுத்தவளுக்கு வாற மாசம் பெறுமாதம். மூன்றாவதும் கட்டிகொடுத்ததுக்கு இப்பதான் முதல்தடவையாக வந்திருக்கிறாள். கடைக்குட்டி கம்பஸ் சாப்பாடு சரியில்லை போல வாடி வதங்கி வந்திருக்கு பிள்ளை.
அவளுக்கு எங்கை நேரம். ஆளாளுக்கு தேவையானது எல்லாத்துக்கும் பறந்துகொண்டிருக்கையில் காலமை என்ர தேத்தண்ணியை கூட கொடுக்கேல்ல. கடைக்குட்டியை கேட்டுத்தான் குடிச்சன்.
இப்ப அவளுக்கு மத்தியான சமையல் அவசரம். எத்தனை நாளைக்கு பிறகு இப்டி ஒரு கலகலப்பு வீட்டில.
என்ர பொண்ணுகள் எல்லாம் கொடுத்து வச்சதுகள். வந்த மாப்பிள்ளைமார் தங்கம். தங்கட பாட்டில எல்லா அலுவலும் நடக்குது.
இப்படியே எல்லோரும் சந்தோசமாக இருக்கோணும் எண்டு உள்மனசு நினைக்கயிலயே கண்ணும் கலங்கி போகுது.

ராசாத்தி வயிறு புகையுது ஏதாவது சாப்பிட தாறியா... எங்கை இவள்? ராசாத்தி ராசாத்தி ....

கூடை நழுவி இருக்க சுவரில் சாய்ந்தபடி தூங்கியிருந்தாள் என் ராசாத்தி. மழைக்கு அவள் வைத்த ஒழுக்குசட்டி நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. தூக்கணாங்குருவி இரண்டு குடும்ப போட்டோவை திரும்ப திரும்ப கொத்தியபடி இருந்தது.

Tuesday, February 16, 2010

விடுபட முடியாமல் ....


இருள் அகலாத காலை பொழுதினில்
எனக்குள் இருந்த உறக்கம் தொலைந்தது
இறுக்க மூடிய போர்வை விலக்கி
கண்களை கசக்கி கடிகாரம் தேடினேன்
பிள்ளையார் கோவிலின் பெரியமணி
மூன்று தடவைகள் அடித்து ஓய்ந்தது
எங்கோ தொலைவில் ஒற்றைக் குயில்
கூவி இசைப்பது காதில் ஒலித்தது
வேப்பமரத்து காக்கா விடியவே
வந்து தன் வரவு பகிர்ந்தது
மெல்ல ரெலிபோன் சிணுங்கும் சத்தம்
மிச்சம் இருந்த சோம்பலை பறித்தது
எட்டி மெல்ல எடுத்த போது
என்னவள் குரல் இதமாய் இருந்தது
"செல்லம்" என்ற சிணுங்கல் சத்தம்
சிட்டாய் எந்தன் நெஞ்சை நிறைத்தது
எதிர் இருக்கைகாரன் எழுந்து செல்ல
மெல்ல சொன்னான் பாதோம் (மன்னிக்கவும்)என்று
கண்கள் திறந்து வெளியே
பார்க்கையில் கடந்திருந்தேன்
இறங்கும் இடத்தை ....

Saturday, February 13, 2010

வலி


அதிகாலை தொலைந்தும் தூக்கம் மீராவை நெருங்காது துன்புறுத்திக் கொண்டிருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. எப்போதுமே அடிமனதில் இருக்கும் வலிதான் அது. இன்று அதிலிருந்து அவளால் மீள முடியவில்லை.
அவர்கள் வீட்டில் தான் லட்சுமி மாமி இடம்பெயர்ந்து வந்து இரண்டு வருடங்களாக இருக்கிறாள். அவள் தனது மூன்று வயது நிலாவைக் கண்டித்துக் கூறிக்கொண்டிருந்தாள். நிலா எதுவும் பிழை செய்துவிடவில்லை. எல்லா சிறுமிகள் போல அவளும் இன்று மதியம் வீட்டுக்கு வந்த தனது ஒன்றுவிட்ட குட்டித்தங்கையை தூக்க ஆசைப்பட்டாள். அதற்கு தான் மாமி மீராவைக் இழுத்து விவாதித்துக் கொண்டிருந்தாள். நிலா குழந்தைகளை நீ ஒரு போதும் தூக்க கூடாது. வானதியக்காவை அவ குட்டி பாப்பாவாக இருக்கும் போது மீராக்கா தூக்கி விழுத்தியதில் தான் அவ கதைக்க முடியாமல் கையால் கதைக்கிறா. நீ ஒரு குட்டி பாப்பாவையும் தூக்கக் கூடாது. ஓகேயா!

நிலாவிற்கு அவள் சொன்னது புரிந்ததோ இல்லையோ தலையை ஆட்டியபடி கேட்டுக்கொண்டிருந்தாள்.
ஆனால் வீட்டிற்கு பின் நின்று பூப்பறித்துக் கொண்டிருந்த மீராவின் தலையில் யாரோ பலமாக சம்மட்டியால் அடித்த உணர்வு. தாங்கமுடியவில்லை. அப்படியே யாரும் அறியாமல் தன் அறைக்குள் நுழைந்தவளுக்கு அழுகையை அடக்கமுடியவில்லை.
ஐந்து வயதில் ஆசைப்பட்டு ஆறுமாதமான வானதியை அவள் தூக்கியது வீழ்த்தியது எதுவுமே அவளுக்கு நினைவில் இல்லை. மூன்று வயதாகியும் வானதி கதைக்காத போதுதான் முதன்முதலில் டொக்டரிடம் காட்டினார்கள். அவர் இது பரம்பரையால் வந்ததாகவோ அல்லது உயரத்தில் இருந்து விழுந்ததாலோ ஏற்பட்டதாக இருக்கலாம். எனினும் வானதி கதைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறினார். தெரியாத வயதில் அறியாமல் அவள் செய்ததை அவரவர் தங்கள் குழந்தைகளுக்கு கதையாக சொல்கையிலும் விபரம் தெரிந்ததில் இருந்து வானதியை அவள் பார்க்கையிலும் அவள் ஆழ்மனதில் பீறிட்டு எழும் வலியின் ஆழத்தையும் யாரும் அறிவதில்லை.
ஒருவரின் வாழ்க்கை இன்னொருவரிற்கு சுவாரஸ்யமான சம்பவம் ஆகிவிடுகின்றது போல. அவரவர் வலி அவரவர்க்கே. சிந்தனை ஓட்டத்தில் சுய பச்சாதாபம் மேலோங்க மீரா அந்த ஆழமான வலியுடனே அயர்ந்துபோனாள்.

Sunday, February 07, 2010

அச்சச்சோ !!




தை 30 . தைப்பூசம். அம்மா, அத்தை இருவரும் அது நல்ல நாள் என்று உறுதியாக சொன்னதில் என் பையனிற்கு சோறு தீர்த்தலாம் என முடிவானது.
காலையில் இருந்தே ஒரே பரபரப்பு. எல்லா வேலைகளும் முடித்து நாங்களும் கோவில் வந்து சேர அண்ணாவும் வந்துவிட்டார். ஆசைக்கு ஐந்தாறு போட்டோ எடுத்து அந்த காரியம் சிறப்பாகவே முடிந்ததில் பரம திருப்தி.

பிள்ளைகள் கூட வருவது கஷ்டம் என்று அடிக்கடி கோவிலுக்கு வருவதுமில்லை. வந்தனான் அர்ச்சனையும் செய்து கொண்டு போவோம் என நினைத்து மகனை இவரிடம் வைத்திருக்க கொடுத்துவிட்டு லைனில் நின்றேன். எனக்கு முன்னால் 3 பேர் தான். பின்னால எப்டியும் பத்து பேருக்கு குறையாது. கடவுளே பிள்ளைக்கு பசிவர முன்னம் போகணும்.

என் முன்னால் நின்றவர்களது அர்ச்சனையினை முடித்து ஐயர் என்னிடம் வந்தார். அவருக்கும் ஒரு 30 க்கும் 40 க்கும் இடையில் தான் வயசு. நல்ல களையான முகம்.

எங்கட குடும்பத்துக்கும் அக்கா குடும்பத்துக்கும் செய்யவேணும்.
ஐயர் என்னிடம் வந்து பெயர் நட்சத்திரம் சொல்லுங்கோ என்றார்.

நானும் சுகிர் குடும்பம் நாமதேசிய !!!!
வசந்தன் குடும்பம் நாமதேசிய !!!!!!!!
என்றேன்.

என் பக்கத்தில் நின்றவர்கள் வாய்பொத்தி சிரிக்க ஐயர் சிரிக்க வழியின்றி தவிக்க, என் தவறு எனக்கு புரிந்தது. பம்பலாக கதைப்பது பழக்கதோசத்தில் வந்துவிட்ட சங்கடத்தில் தலையை சொறிந்தபடி நான் நெளிந்தேன்.

Sunday, January 31, 2010


குளியலறை

புதிதாய் பிறக்க

எனக்குள் நானே போராடும்

என் வீட்டு சின்ன மாளிகை



சந்தன சோப்பு

எத்தனை முறை தழுவும் போதும்

புத்துயிர் பெறுகிறேன்

ஒவ்வொரு முறையும்

உன்னைத் தடவுகையில்


ரவெல்

என் மீது படர்ந்திருந்த

பனித்துளிகள் சங்கமமாகின்றன

பூப்போன்ற உன் அணைப்பினிலே


போர்வை

உலகம் உறங்குகையில்

உனக்குள் ஒளிந்து கொள்கின்றேன்

ஒவ்வொரு நாளும் தவறாமல்


தலையணை


தலைசாய்த்து

தஞ்சம் புகும்

தாய்மடி நீதான்

Saturday, January 23, 2010

நீ போகிறாய்!!!


நீ போகிறாய்

பரிசாக....
நிறைய ஏமாற்றங்கள்
சகிக்கவே முடியாத துன்பங்கள்
மறக்க இயலாத துயரங்கள்
ஆறாத ஆழமான காயங்கள்

இவற்றுடன்
சின்னச் சின்ன சந்தோசங்கள்
எண்ணிடக்கூடிய பூரிப்பான நிமிடங்கள்
எல்லாவற்றையும் தந்துவிட்டு

என்ன சொல்லியும் கேட்காமல்
எவருக்கும் கட்டுப்படாமல்
நீ நகர்ந்து போகிறாய்

எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில்
அடுத்த சில கணங்களுக்காக காத்திருக்கிறோம்
புத்தாண்டு வருகிறதாம்...

அது இதுதானா.....


சில சமயங்களில் மென்மையாய்
மறுசமயத்தில் கடினமாய்
வரித்திட முடியாத சந்தோசத்தையும்
வாழ்வையே வெறுக்கும் வலியையும்
இருக்கும் போது இனித்து
இல்லாத போது வலித்து
எல்லாம் என்றும் தோன்றும்
எதுவும் இல்லை என்றும் சொல்லும்
உயிராய் இருக்கும்
உலகமே மறக்கும்
இனம்புரியாத
இன்னது தான் என்று
சொல்லமுடியாத
உணர்வு தானா
இந்தக் காதல் ????

Friday, January 22, 2010

அன்பில் ...........


தட்டி யாரிடமும்
தா என்று கேட்கமுடியாது
தந்ததை
எப்பவும் மறக்க முடியாது

கணக்கு வழக்கு
எனக்கு புரியலை
காரணம் சொல்லவும்
எனக்குத் தெரியலை

பெறும்போதெல்லாம்
உள்ளம் இனித்தது
கொடுக்கும் வழிதான்
தெரியாதிருந்தது

உதடு வேணும்னா
பொய்கள் சொல்லலாம்
உள்ளத்துக்கு மட்டும் தான்
சுகங்கள் தெரியும்

உலகுக்கு என்னை தெரியாது
உண்மையில் நான் ஓர்
கடன்காரி!!!!

Friday, January 08, 2010

என்னடா இது !!!!!!!!!!




அப்பப்பா !!!!!!!!!!
தாங்கமுடியலை
ஒண்ணுக்கு மேல ஒண்ணா
எத்தனை !!!!!
எவ்வளவு முயன்றும்
கட்டுப்படுத்தமுடியலை

எனக்கு வரும் கோவத்திற்கு
சுட்டு பொசுக்கிவிட தான் ஆசை
என்ன செய்ய முடிகின்றது இதனுடன்
இதற்கு பயந்து
வாழ்க்கை சக்கரம்
சுழலாமலா நிற்கின்றது

make up உம் மேல மேல
உடுப்பும் போட்டு
கடத்தி விட வேண்டியதுதான்
இன்னும் இருக்கின்ற
இரண்டு மாத குளிர்காலத்தையும்

காதலும் மாறுகின்றதா


கண்டதும் hello என்றான்
கவனியாத மாதிரி நகர்ந்தேன்
நீங்க ரொம்ப அழகாய் இருக்கிறீர்கள்
எதுவும் கேட்காதது போல நான்
உங்க phone no தாறியளா??
என்னடா வம்பு இது !!!
எரிச்சல் வந்தது
காலையில் வேலைக்கு
போகும் அவசரம் எனக்கு
இனியும் இது தொடர கூடாது
நல்ல வேளை பொட்டு இல்லை
மெல்லமாக சிரிச்சேன்
im already married என்றேன்
அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை
அசடு வழிகின்ற நிலை பாவமாக இருந்தது
அதன்பின் அவனை பார்த்ததாக நினைவு இல்லை
இரண்டு மாசம் போயிருக்கும்
பள்ளி தோழி ஒருத்தி ஒரே நச்சரிப்பு
பார்த்து சொல்லடி எப்பிடி என்ர ஆள் எண்டு
நானும் யாரையோ மனசில வைச்சு
முடிவெடுக்க கேட்கிறாள் எண்டு தான் நினைச்சேன்
KFC இற்கு வா ஞாயிற்று கிழமை 4 மணிக்கு என்றாள்
போனதும் திகைத்தேன்
கைகள் இணைத்தபடி அவளும் அந்த அவனும்
எனக்கு தான் சங்கடம்
அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை
அவள்தான் அறிமுகம் செய்தாள்
hello என்றான் எப்பவும் கண்டிராத தோரணையில்
அவர்கள் நெருக்கம் என்னையும் சகஜ நிலைக்கு இழுத்து வந்தது
பேச்சுவாக்கில்
சொல்லவே இல்லை எவ்வளவு நாளாய்
இது உங்களிடையே என்றேன்
அரை வருஷம் முடியுதடி என்றாள்
பகீர் என்றது எனக்கு
சுரீர் என்ற வலி தோன்றி மறைந்தது
அரைமணி நேரம் அதன்பின்பும் இருந்து
ஏதேதோ பேசினோம்
எந்தன் மனதில் மட்டும்
என்னவனும் இப்டித்தானோ
இன்னொரு பெண்ணிடம் அசடு வழிவான்
என்ற கவலை இருந்துகொண்டேயிருந்தது
காதலும் மாறுகின்றதா
காலத்தின் போக்கிற்கு ஏற்ப ??????????????

Friday, December 11, 2009

எனக்குள் நானே ...........


என்னில் நானே
தோற்றுப் போன போது
எனக்குள் நானே
தொலைந்து போனேன்
மீட்கப்பட முடியாத அளவிற்கு
நொறுங்கிய நிமிடங்களில்
இழந்து போன நிம்மதியை
தேடி நிரப்பிவிட
ஆசைப்படுகிறது மனம்
எங்கோ பிரிந்து
என்னை விட்டுப் போன சந்தோசத்தை
உன் இதயம் திருப்பி கொடுக்குமா???
ஏக்கம் பன்மடங்கு
என்னுள் இருந்தபோதும்
இன்னும் வெற்றிடமாகவே
இடைவெளிகள் எனக்குள் ..............

Sunday, November 29, 2009

கார்த்திகை மாதம் இது




வானத்தாயின் அரவணைப்பில்
சில்லிட்டு போயிருக்கிறாள் பூமித்தாய்
இடம்பெயர்ந்து இன்னல் பல அனுபவித்த
எம்மவர்கள் மீள வந்திருந்து
ஏக்க பெருமூச்சு விடுகிறார்கள்
தரிசாய் கிடக்கும் நிலங்களை பார்த்து

அங்கொன்றும் இங்கொன்றுமாக
தெரிகின்ற ஆள்கருப்பு
ஆட்களில்லாத வீடுகளில்
அட்டகாசம் செய்யும் ஆனைகள்
கால்கள் இரண்டுக்கும் நாலுக்கும்
பயந்து கூட்டம் கூட்டமாய்
கூடி வாழுது எங்களினம்.

அன்றைய நாட்களை
அசைபோடும் மனசுக்கு எல்லாம்
கனவாய் இருக்கிற வாழ்க்கை

செம்மண் கொண்ட எங்களூரில்
சேறில் கூட பூக்கள் பூக்கும் காலமிது
விளக்குகள் கொளுத்தி
விழாகோலம் பூணும் நாட்களிவை
உயிர்வாழ்தலிட்கான பயத்தில்
மையிருட்டுக்கள் வெறுமையாகவே
எங்கள் கல்லறை தெய்வங்கள் ...............

Saturday, October 17, 2009

காதல் நினைவுகள்!


தீராத காதல்
தரைமீது அலைக்கு
தட்டித் தரை கழித்தாலும்
கரையை வந்து பார்ப்பதற்கு
அலைகள் மறப்பதில்லை
கரையும் மௌனித்தது
கடைசிவரை நிறைவேறா
காதல் இதுவென்று
அலையது சுமந்துநின்ற
ஆசைக் காதலது
கைகூடாவிட்டாலும்
களித்திருந்தது தன்
காதலியைத் தினம் காண்பதனால்

கரையும்....
காதலதை மனம்சுமக்க
காதலரைத் தான் தாங்கி
களிப்படைந்தது

கரையின் மடியில்
கடலலையின் அரவணைப்பில்
கைகோர்த்து நாம் நடந்த
காலடித் தடம் தேடுகின்றேன்
கரையைத் தொடும் அலைகள்
களவாடிச் சென்றன அவற்றை
கரையைப் போல் நானிருக்க
தழுவிச் செல்கின்றன அலையாக
உன்நினைவுகள்!

Friday, October 16, 2009

என் கவிதை


இரவின் நிசப்தத்தில்

விழிகள் மூட மறுத்ததால்

எழுதத் துடிக்கிறது

எந்தன் பேனா


கவி ஒன்று வரும் என்று

கைகள் கிறுக்கிய போது

எழுதப்பட்டது எல்லாம்

உந்தன் பெயர் மட்டுமே


வெண்ணிலவையும்

மின்னும் நட்சத்திரங்களையும்

பரந்து விரிந்த கறுத்த வானத்தையும்

பார்த்தபடி காத்திருக்கிறேன்

உந்தன் வருகைக்காக

Thursday, October 15, 2009

காதலைத் தெரிந்துகொள்

உன்னை பிடிக்கும் என்று
ஓராயிரம் காரணம் சொன்னேன்
ஒற்றைச் சொல்லில்
பிடிக்கலை என்று ஏன் சொன்னாய்
ஒரு காரணமும் சொல்லாமல்

சுற்றிய தெருக்களும்
பேசிய விழிகளும்
தூங்காத இரவுகளும்
பேசாத வார்த்தைகளும்
அறியும் என் காதலின் ஆழத்தை

என்றோ ஒருநாள்
உன்வாழ்விலும் காதல் வரும்
அப்போது அதன் சோகங்களை
நீ உணராவிட்டாலும்
சந்தோசங்களயாவது தெரிந்துகொள்
வாழ்க்கை முழுமை பெறட்டும்!